அவர் என்னை பூந்தோட்டத்திற்கு போகச் சொல்லியும் நான் போகவில்லை. தயங்கியபடி நின்றுகொண்டே இருந்தேன்.
'என்ன தோட்டத்துக்கு போகலையா?'
'இல்ல மாமா. எனக்கு ஒரு பேப்பரும் பேனாவும் தரேளா?'
'ஏன்? என்ன விஷயம்? யாருக்காவது கடுதாசி எழுத போறியா?'
'கொடுங்கோளேன். நான் என்னமோ எழுதப் போறேன். அது சீக்ரெட்.'
'சரி. அந்த ஷெல்ஃப் மேல இருக்கு பார். நீயே எடுத்துக்கோ. எட்டலைனா அந்த கணக்குப்பிள்ள டெஸ்க போட்டுண்டு கீழ விழுந்துடாம ஜாக்கிரதையா எடுத்துக்கோ.'
பேப்பரும் பேனாவும் கிடைத்துவிட்டது. அந்த கணக்குப்பிள்ளை டெஸ்கையே கையால் ஒரு துடை துடைத்துவிட்டு எழுதுவதற்காக பயன்படுத்திக் கொள்கிறேன்.
எழுத ஆரம்பித்த சில நொடிகளில் அவர் என்னருகில் வருகிறார். அவருக்கு ஒரு ஆர்வம். நான் என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ள.
'மாமாஆஆஆஆஆ. நீங்க பூஜ பண்ண போங்கோ. நான் காமிக்க மாட்டேன்.'
இப்படி சொல்லிவிட்டு டெஸ்கில் குனிந்து கொண்டு எழுதும் பேப்பரை மறைக்கிறேன். என்னுடைய இந்த செயலால் சற்று சிரித்துவிட்டு பூஜை ஏற்பாடுகளில் கவனம் செலுத்த சென்று விடுகிறார்.
நான் எழுத நினைத்து எழுதிக் கொண்டிருந்தது இந்த ப்ராஸனம் சம்பந்தமாக எனக்கு எழுந்த சில சந்தேகங்களின் குறிப்புகள் தான்.
படபட என்று குறிப்புகளை எழுதிவிட்டு பேனாவை எடுத்த இடத்தில் வைத்து விட்டு உடுத்தியிருந்த டிராயரில் எழுதிய பேப்பரை மடித்து வைத்துக்கொண்டு பூந்தோட்டத்தை நோக்கி செல்கிறேன்.
பூந்தோட்டத்தில் செடிகளோடு பேசிக்கொண்டிருந்தபோது பூஜையில் அவர் அசைத்த வெண்கல மணியின் ஓசை எனக்கு பூஜையின் இறுதிக்கட்டத்தை உணர்த்தியது. மடத்திற்குள் வந்துவிடுகிறேன்.
பாண்டுரங்கனுக்கு அவர் காட்டிய தூப தீப ஆராதனைகளை பார்க்கும் பாக்கியம் எனக்கும் கிடைக்கிறது.
நிவேதனம் செய்த இரண்டு வாழைப் பழங்களில் ஒன்று அவருக்கு மற்றொன்று எனக்கு.
'என்ன பாஸு. ஆரம்பிக்கலாமா?'
'காத்துண்டு இருக்கேன்'
'யாருக்கோ லெட்டர் எழுதினியே. அதை என்கிட்ட காமிச்சா தான் மேற்கொண்டு பாடம்.'
'மாமாஆஆஆஆஆ. அது சஸ்பென்ஸ். இப்ப சொல்ல மாட்டேன். நீங்க கிளாஸ் முடிச்சோண்ண தான்.'
'நீ என்ன எழுதினேன்னு சொல்ல வேண்டாம் என்கிட்ட. யாருக்கு கடுதாசி எழுதின அப்படின்னு சொல்லணும் இப்பவே. அப்பத்தான் க்ளாஸ்.'
'அது ஒண்ணும் இல்ல மாமா. நான் மறக்காமல் இருக்கறதுக்கு என் சந்தேகங்கள குறிச்சி வைச்சிண்டேன்.'
'அப்படியா. என்ன சந்தேகம் சொல்லு. உன்னோட குறிப்ப பார்த்துண்டே கூட சொல்லலாம்.'
'நீங்க கையால காலால மனசால பேச்சால ... அப்படின்னு தினுசு தினுசா நாம பாவம் செய்யதா சொன்னேள் இல்லையா. அது எப்படி? விளக்கமா சொல்ல முடியுமா உங்களால?'
ஓ.. தாராளமா சொல்லலாமே. ஒவ்வொண்ணுக்கும் உதாரணம் சொன்னா போருமோன்னோ?'
'போதும்னு தான் நினைக்கிறேன் இப்ப சப்திக்கு.'
'சரி முதல்ல மனஸ எடுத்துக்கறேன். பொதுவா மனசு எண்ணங்களத்தானே கொடுக்கறது. ஒருத்தனோட எண்ணம் அல்லது சிந்தனை நன்னா இருந்தா அவனுக்கு நல்ல மனசு அப்படின்னு சொல்லுவோமோன்னோ? குறிப்பா நீ ஒருத்தன் மேல கோபமா இருக்கிற சமயத்தில அவன் என்ன அடிச்சிட்டான், அவன் பரிட்சையில் ஃபெயிலாகணும்னு நினைச்சிட்டாலே அது உன்னோட பாப கணக்குல சேர்ந்துடறது. அதனால கூடிய வரைக்கும் நாம யாரையும் மனசால சபிக்க கூடாது.'
'ஏன் மாமா. அவன் என்ன அடிச்சதால தானே நான் சாபமிட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு?'
'அவன் உன்ன அடிச்சான். அடிச்சதுக்குண்டான பாவம் அவனுக்கு சேரும். அதுக்காக நீ அவன சபிச்சா அதுக்குண்டான பாவம் உனக்கும் வரும். எதிர்மறையா நீ அவன் சபிக்காம பகவான் கிட்ட விட்டுட்டு போறது தான் நல்லது.'
'எனக்கு என்னவோ இது பிராக்டிகலா சரியா வருமா அப்படிங்கிறது டவுட்டா இருக்கு மாமா.'
'நீ சொல்றது கூட சரிதான். அதுக்காகத்தான் இந்த பிராஸன மந்திரத்துல மனசால அறியாம செஞ்ச பாவங்களையும் சேர்த்து க்ஷமிக்க சொல்றோம்.'
'ஏத்துப்பாரா மாமா பகவான்?'
'ஏத்துப்பார் அப்படிங்கிற நம்பிக்கை இருக்கிறதால தானே விண்ணப்பங்கள வைக்கிறோம் இல்லையா?'
'இது மாதிரியே கையால ஒருத்தர அடிக்கிறது காலால ஒருத்தர ஒதைக்கறது இதெல்லாமும் பாவக் கணக்குல சேர்ந்துடும். வயிற பொருத்தவரைக்கும் கண்ட கண்ட நேரங்கள்ல சாப்பிடறது நாம சாப்பிடக்கூடாத வஸ்துக்களை சாப்பிடறது .... இதெல்லாம் கூட பாவங்கள் அப்படின்னு சாஸ்திரங்கள் சொல்றது. அதனாலதான் இந்த வயிற்றையும் இந்த லிஸ்ட்ல சேர்த்திருக்கா. ஏன், நம்மளோட அந்தரங்க உறுப்பால கூட பாவங்கள மனுஷா செஞ்சுடறதால அதைவும் இந்த மந்திரத்தில சேர்க்கப்பட்டிருக்கு.'
'புரிஞ்சுது மாமா. பாவங்கள் என்ன செஞ்சாலும் பகவான் இருக்கார் பாவத்தைப் போக்க. இல்லையா?'
'ஏய் படவா. பகவான் காப்பாத்துவார்னு தெரிஞ்சே தப்பு செஞ்சுண்டே போனா மன்னிப்பு கொடுக்க மாட்டார். மண்டைல இரண்டு போடுவார். நம்மள அறியாம யதார்த்தத்தில தப்பு செஞ்சிட்டு பின்னாடி ரியலைஸ் பண்ணும்போது பகவான சேர்த்துண்டு பிரார்த்தனை பண்ணனும். புரிஞ்சுதா?'
சிரித்துக்கொண்டே, 'புரிஞ்சது மாமா. சும்மா உங்ககிட்ட சித்த விளையாடினேன்.'
'நேக்கும் தெரியுமாக்கும் இது. நம்ம பாஸு எப்படிப்பட்டவன்னு நேக்கு தெரியாம இருக்குமா?'
இருவருமே சிரிக்கிறோம் இப்போது.
'சரிடா பாஸு. மேலோட்டமா நான் சொன்ன மந்திர விளக்கம் நோக்கு புரியலன்னா பதம் பிரிச்சு வேணா சொல்லட்டுமா?'
'எனக்கும் பதம் பிரிச்சு தெரிஞ்சுண்டா நல்லதுன்னு தான் தோணறது மாமா.'
'சரி பார்த்துடுவோம். நானே ஒரு தடவை இந்த பிராஸன மந்திரத்த இப்ப சொல்றேன். நீயும் ஃபாலோ பண்ணு.'
'ஸூர்யஸ்ச்ச
மாமன்யுஸ்ச்ச
மந்யு பதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய:
பாபேப்யோ ரக்ஷந்தாம், யத்ராத்ர்யா பாபமகார்ஷம்
மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிஸ்னா
ராத்ரிஸ் ஸ்தவலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோநௌ ஸூர்யேஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா'
'இதுதானே ப்ராஸன மந்திரம்? இப்ப நான் உனக்கு இந்த மந்திரத்தை பதம் பிரிச்சு அர்த்தத்தை சொல்லப்போறேன். கவனமா கேட்டுக்கோ.'
ஸூர்யஸ்ச்ச : அனைத்தையும் இயக்குகிற சூரியனும்
மாமன்யுஸ்ச்ச: அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும்
மந்யு பதயஸ்ச்ச: கோபத்தை கையாளும் தெய்வ சக்திகளும்
மன்யுக்ருதேப்ய: கோபத்தால் செய்யப்பட்ட
பாபேப்யோ ரக்ஷந்தாம் :: பாவங்களிலிருந்து காப்பாற்றட்டும்
ராத்ர்யா : இரவில்
மனஸா: மனத்தாலும்
வாசா: வாக்காலும் ஹஸ்தாப்யாம்: கைகளாலும் பத்ப்யாம்: கால்களாலும் உதரேண: வயிறாலும்
சிஸ்னா: ஆண் குறியாலும்
யத் :: எந்த
பாபம் :: பாவத்தை
அகார்ஷம் :: செய்தேனோ
கிஞ்ச :: இன்னும்
மயி :: என்னிடத்தில்
யத் :: எந்த
துரிதம் :: பாவம் உண்டோ
தத் :: அதையும்
ராத்ரி: இரவின் அதிதேவதை
அவலும்பது :: நீக்கி அருள வேண்டும்
இதம் மாம் :: இப்படி பாவம் நீக்கிய என்னை
அஹம் :. நான்
அமிர்தயோநௌ : மோட்சத்திற்கு காரணமாகிய
ஸுர்யே ஜ்யோதிஷி :: சூரிய வடிவான பரஞ்சோதியில்
ஜுஹோமி :: ஹோமம் செய்கிறேன்
ஸ்வாஹா :: இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும்.
'இதுதாண்டா பதம் பிரிச்சு பார்த்தாக்க கெடைக்கிற அர்த்தம். செய்யுள்லேந்து பதம் இருக்கும் போது ஒண்ணு ரெண்டு பதங்கள் முன்ன பின்ன வரும். ஆர்டரா வரணுங்கர அவசியமில்ல. தமிழ் செய்யுள்கள பதம் பிரிச்சு அர்த்தம் தெரிஞ்சுக்கும் போது கூட இப்படி முன்ன பின்ன வருமோன்னோ?'
'நான் பூஜைக்கு முன்னாடி நான் நோக்கு சொன்ன பொருள் பதம் பிரிச்சு சொன்னபோதும் வந்ததோண்ணோ?'
என் மனம் முழுவதும் இப்போது மின்சாரம் பாய்ந்த ஒரு உணர்வு. எப்படி எல்லாம் மந்திரத்தை வெச்சிருக்கா? என்னையும் மீறி வந்த ஓரிரு சொட்டு கண்ணீர் துளிகள்.
'இந்தப் ப்ராஸன மந்திரம் எப்படி பாஸு இப்ப நோக்கு?'
'வார்த்தைகளே வரமாட்டேங்கறது மாமா. இப்பவே சமஸ்கிருதம் கத்துக்கணும்னு தோண்றது.'
'கண்டிப்பா தோணும். தோணனும். எப்ப கத்துக்கணும்னு தோண ஆரம்பிச்சுடுத்தோ நேரமெல்லாம் கூடி வரும்போது தானா கத்துக்க ஆரம்பிச்சுடுவ.'
'ரொம்ப தேங்க்ஸ் மாமா. எனக்குள்ளே இருந்து நானே வெளிப்படற மாதிரி இருக்கு. ஒண்ணுமே சொல்ல தெரியல மாமா.'
'மேற்கொண்டு பாடம் வேண்டாம். இன்னிக்கு முழுதும் இதே மாதிரி உணர்வோட சுகப்பட்டுண்டு இரு. ஈஸ்வரன் உன்ன ரக்ஷிப்பார்.'
நமஸ்கரிக்கிறேன் அவர் பாதங்களை தொட்டு. இன்றைக்கு என்னமோ சற்று கூடுதல் நேரம் பிடித்தது அவர் பாதங்களிலிருந்து என் கைகளை விலக்கிக் கொள்ள. ஏதோ என்னிடமிருந்த அத்தனை பாவங்களும் விலகிய ஒரு உணர்வு.
'அபிவாதயே...' ஆரம்பிக்கிறேன். இன்று என்றுமில்லாமல் அக்ஷரப் பிழைகள் சொல்லும்போது. என் ஃபோக்கஸ் முழுவதும் ப்ராசனம் மந்திரத்தில் லயித்திருந்தது தான் காரணமோ ஒருவேளை!
தொடரும்..