பகுதி 11
அவர் குறிப்பிட்டு சொன்ன நேரத்தில் மடத்திற்கு வருகிறேன். மடத்தின் வாசல் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.
'மாமா இருக்கார். ஆனா பிசியா ஏதோ வேலை செஞ்சிண்டிருக்கார் மடத்துக்குள்ள' என்பது என் தீர்மானமாக இருந்தது. கதவை தட்டுவதற்கு முன் கரையை தொட்டுக்கொண்டு செல்லும் பாமணி ஆற்றை பார்க்க ஒரு விருப்பம்.
ஆற்றங்கரையில் இரு நாட்களுக்கு முன்புதான் தண்ணீர் வர துவங்கியிருந்தது. ஆற்று நீர் ஏற்படுத்தும் சலசலப்பும் சூரியனின் பிம்பம் ஆற்றில் விழுவதால் ஏற்படும் கண்ணைக் கூசும் பளிச்சென்ற ஒளிக்கீற்றுக்கள். கண்களை சுருக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி நீரோட்டத்தை நான் ஏதோ தடுத்து நிறுத்துவது போல கைகளை வைக்கிறேன். சில்லென்று கைகள் பெற்ற குளிர்ச்சி. கைகளால் நீரோட்டத்தை தள்ளுகிறேன்.
'என்ன பண்ணிண்டு இருக்காய்? என்னடா பாஸுவை காணோம்னு பார்த்தா நீ இங்க விளையாடிண்டு இருக்கியாக்கும்.'
'இல்ல மாமா. வந்தேன். கதவு உள்பக்கமாக தாழ்பாள் போட்டு இருந்தது. அதான் இங்க வந்து சித்த நேரம் ஆத்தாங்கரைய பார்த்துட்டு வரலாமுன்னு இருந்தேன்.'
'முந்தானாள் தானே தண்ணி வர ஆரம்பிச்சது. இன்னும் பத்துப் பதினைந்து நாளைக்கு ஜலத்தோட வேகம் கூடிண்டே இருக்குமோன்னோ. சின்ன பையன் இல்லையா நீ? தனியா இங்க வரலாமா?'
'மாமா எனக்குத்தான் நீச்சல் தெரியுமே'
'அதான் உன்ன நீச்சல் சாகசத்த பார்த்துட்டு திருப்பாற்கடல் தெருவே பயப்படறதே. நீச்சல் தெரிஞ்சு வெச்சிக்கறது நல்லதுதான். ஆனாலும் துணைக்கு பக்கத்துல யாரும் இல்லாம உன்னோடு சாகசத்தெல்லாம் காட்டக்கூடாது. சரியா? சரி மடத்துக்கு வா.'
படிக்கட்டில் உட்கார்ந்து இருந்த என்னை கைப்பற்றி அழைத்துச் செல்கிறார்.
'இன்னைக்கு உனக்கு சங்கல்பம் தானே சொல்லித் தரணும்?'
'ஆமா மாமா. பிராணாயாமம் முடிஞ்சு அதுதானே வரும்?'
'சரி. ஆரம்பிச்சுடலாம். அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி ஒன்ன கேட்கணும். உங்க பள்ளிக்கூடத்துல பிரேயர் போது உறுதிமொழி ஏதாவது எடுத்துப்பேளா?'
'ஓ எடுத்துப்போமே. ஆனா இங்கிலீஷ்ல தான் சொல்லுவோம்.'
'எங்க அத கொஞ்சம் உன் வாயால ஒரு தடவ இங்க சொல்லு பார்ப்போம். கேழ்கிறேனே நானும் தான்.'
'India is my country and all Indians are my brothers and sisters I love my country, and I am proud of its rich and varied heritage. I shall always strive to be worthy of it. I shall give respect to my parents, teachers, and all the elders, and treat everyone with courtesy.'
'வெரி குட். ரொம்ப நன்னா சொல்றியே. இதுக்கெல்லாம் உனக்கு அர்த்தம் சொல்லி கொடுத்து இருக்காளா பள்ளிக்கூடத்துல?'
'சொல்லிக் கொடுத்திருக்கா மாமா. நான் வேணா உங்ககிட்ட இப்ப அர்த்தங்களை சொல்லட்டுமா?'
'வேணாம் வேணாம். உனக்கு அர்த்தம் தெரியுங்கறது எனக்கு புரிஞ்சு போச்சு. நான் இப்ப ஒரே ஒரு கேள்வி கேட்கப் போறேன். பயப்படாதே. இதே உறுதிமொழியிலேந்துதான்.'
ஆர்வம் என்னிடம் சற்று தலை தூக்குகிறது. 'என்ன கேள்வி கேட்பார்? அர்த்தம் கூட நான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாரே?'
'நீ பாரத தேசத்தில பொறந்தவன் தானே? நீ நம்ம நாட்ட நேசிக்கிறவன் தானே? எல்லார்கிட்டயும் அன்பா பழகுற வன் தானே? இதெல்லாம் இருந்தும் தினமும் ஏன் இந்த உறுதிமொழியை பள்ளிக்கூடத்துல சொல்லணும்? என்னிக்காவது இதைப்பத்தி யோசிச்சி இருக்கியா?'
இதுவரை நான் யோசித்ததில்லை. ப்ரேயர்ல சொல்லணும். அது மட்டும் தான் எனக்கு தெரியும். அவர் கேள்வியில் ஏதோ சூசகம் இருக்கிறது என்று புரிகிறது. கேட்டு விட்டாரே. அசட்டுத்தனமான பதிலாக இருந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும்? தெரியலையே மாமா... இது கொஞ்சம் பெட்டராக இருக்குமோ?'
'எனக்குத் தெரியலையே மாமா. ஏன் மாமா டெய்லி சொல்ல வைக்கிறா ஸ்கூல்ல?'
'எந்த ஒரு செயலுக்கும் முன்னாடி உறுதிமொழி ஏத்துக்கறது அப்படிங்கிறது நம்பிக்கை சார்ந்த விஷயம். ஸ்கூல்ல படிக்க போறோம். பாடங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம பாரத தேசத்துக்காரா, நாம பாரத தேசத்தை ரொம்ப விரும்பறோம் சக மனிதர்களை சகோதர சகோதரிகளா பாவிக்கிறோம். உனக்காக படிக்கிறது அப்படிங்கறது ஒருபுறம் இருந்தாலும் இந்திய தேசத்துக்காக படிக்கிற அப்படிங்கிற உணர்வ கொடுத்துண்டு படிக்கணும். இதேபோலத்தான் மந்திரங்கள்ல வர ஸங்கல்ப போர்ஷணும்.'
'எந்த ஒரு செயல் தொடக்கத்துக்கும் ஸங்கல்பம் முக்கியம். பொதுவா ஸங்கல்பம்கிறது நம்பிக்கை சார்ந்த விஷயம். பலன்களை எதிர்பார்த்து சொல்லக்கூடிய மந்திரங்களுக்கு நம்பிக்கை ஆதாரமாக இருக்கு. இந்த நம்பிக்கைல ரெண்டு வகை உண்டு. தன்னம்பிக்கை தெய்வ நம்பிக்கை. கொஞ்சம் ஆழமாக சிந்திச்சு பார்த்தோமானா தன்னம்பிக்கைதான் தெய்வ நம்பிக்கை. தெய்வ நம்பிக்கை தான் தன்னம்பிக்கை. கடவுள நம்புறவா கிட்ட தன்னம்பிக்கையும் யதார்த்தமாகவே வந்துடும்'
'சில ஸங்கல்ப மந்திரங்கள் பூஜா பலன்கள விலாவாரியா சொல்லி இருக்கும். க்ஷேமம் தைரியம் வீரம் விஜயம் ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம்.... இப்படி எல்லாம் கிடைக்கும் அப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே வரும். நித்திய கர்மாவான சந்தியாவந்தனத்துல இந்த ஸங்கல்ப மந்திரம் ஒரு சின்ன உறுதிமொழி மாதிரிதான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
'மமோபாத்த-ஸமஸ்த-துரித க்ஷய-த்வாரா-ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராதஹ ஸந்தியாம் உபாஸிஷ்யே... இது கார்த்தால பண்றதுக்கு.
மத்தியானத்துக்கு 'மாத்யான்னிஹம் கரிஷ்யே
சாயரட்சை பண்ற சந்தியா வந்தனத்துக்கு 'ஸாயம் சந்த்யா உபாஸிஷ்யே'
நம்மள மாதிரி இருக்கிற ஸ்மார்த்தாளுக்கும் வைஷ்ணவாளுக்கும் ஸங்கல்பம் சொல்லும்போது ஒரு சின்ன டிஃபரன்ஸ். நாம ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அப்படின்னு சொல்றோம். அவா ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம் அப்படின்னு சொல்வா. மத்தபடி மந்திரங்கள் ரெண்டு பேருக்குமே பொது தான்.'
'இப்ப அர்த்தத்துக்குள்ள போலாமா?'
'மம உபாத்த அப்படின்னா என்னால் அடையப்பட்ட
ஸமஸ்த துரித அப்படின்னா எல்லா பாவங்களையும்
க்ஷயத்வாரா அப்படின்னா நசுக்க செய்யறதுனால
பரமேஸ்வர ப்ரீத்யர்தம் அப்படின்னா பரமேஸ்வரன் அருளுக்கு பத்திரமாகும் பொருட்டு
ப்ராதஹ சந்தியாம் உபாஸிஷ்யே அப்படின்னா காலையில் சந்தியா தேவியை உபாஸிக்கிறேன்.'
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மத்தியானத்துக்கும் சாயந்திரம் சந்தியாவந்தனத்துக்கும் கொஞ்சம் மந்திரத்த மாத்தி அமச்சுக்கணும்.
'இந்த ஸங்கல்ப மந்திரத்த நன்னா உத்து கவனிச்சேயான்னா இது ஒரு நம்பிக்கையோடு ஏத்துக்கிற உறுதிமொழின்னு புரியறதோன்னோ?'
'உன் மனசுல நன்னா படியறதுக்காக சங்கல்ப மந்திரம் அர்த்தத்தை இன்னொரு தடவை சொல்றேன். கவனமா கேட்டுக்கோ.'
'நான் சேர்த்துண்ட பாவத்தை நசுக்கி பரமேஸ்வரன் அனுக்கிரகத்தை அடையறதுக்காக இந்த சந்தியாவந்தனத்த செய்யறேன். அதாவது சந்தியா தேவியை உபாஸிக்கிறேன். உபாஸிக்கிறேன் அப்படின்னு உச்சரிச்சாலும் பாவங்கள் நசுங்கும் அப்படிங்கிற நம்பிக்கையோட பின்னிப்பிணைஞ்ச உறுதிமொழியா இந்த ஸங்கல்பத்த புரிஞ்சுக்கோ.'
'சங்கல்பம் என்பது மனஸ விட விசாலமானது. எப்ப ஒருத்தன் ஸங்கல்ப்பிக்கிறானோ அவன் தெளிவா யோசிக்க ஆரம்பிக்கிறான். தீர்மானம் பண்றான். தீர்மானத்தை பேச ஆரம்பிக்கிறான். பேச்சு பெயர் வடிவம் எடுக்கறது. அப்படி எடுக்கறச்சே மந்திரங்கள் அதுக்குள்ள அடங்கறது. அந்த மந்திரங்கள்ல கருமங்கள் ஒடுங்கறது.'
'உறுதிமொழி எடுத்துண்டு செய்யப்படற செயல் ஒருத்தனுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து இறை அருளையும் அனுக்ரஹிக்க வைக்கறது.'
'நாம ஸங்கல்ப்பம் சொல்லிட்டு ஒரு செயலை செய்யறதால அந்த உறுதி மொழியிலேந்து மனம் கோணாமல் இருக்க பகவான் நம்மள ஜாக்கிரதையா பார்த்துக்கறார்.'
'நன்னா புரிஞ்சுண்டியா டா பாஸு?'
'சரி. இப்ப ரூல்ஸுக்கு போவோம். ஸ்கூல்ல உறுதிமொழி எடுத்துக்கறச்சே என்ன செய்யணும் அப்படின்னு வாத்தியார் சொல்லிக் கொடுத்திருப்பார் இல்லையா? வலது கையை நீட்டிண்டு விரல்கள உள்ளங்கைக்குள்ள மடக்கிண்டு உறுதிமொழி வாசகங்கள சொல்லணும் அப்படின்னு சொல்லி கொடுத்திருக்காளில்லையோ?'
'ஆமாம் ஆமா அப்படித்தான் உறுதிமொழியை சொல்லுவேன்.'
'அதே மாதிரியே ஸங்கல்பம் மந்திரம் செய்யும் போது இடது கை கீழும் வலது கை மேலுமாக வலது தொடை மீது வெச்சுண்டு ஸங்கல்ப மந்திரத்தை ப்ரயோகம் பண்ணனும்.'
'மார்ஜனம் பத்தி பாடம் அடுத்த கிளாஸ்ல வச்சுப்போமோ இல்லை இப்பவே சொல்லிக் கொடுக்கட்டுமா? இதை ஏன் கேட்கிறேன்னா இன்னிக்கு உன் கவனம் கிளாஸ்ல கொறவுதான். ஆத்தங்கர ஞாபகமாவே இருக்கோ?'
அவர் யூகித்தது சரிதான். 'என் மனசுல ஓடறத இவர் எப்படி சட்டுனு புரிஞ்சுக்கிறார்? நான் அவரையே தானே பார்த்துண்டு இருந்தேன் கிளாஸ்ல. எப்படி கண்டுபிடிச்சார்?'
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நான் அன்று கற்ற பாடமாக இருந்ததோ என்னவோ?
'மாமா நான் உங்களை இன்னிக்கி நமஸ்காரம் பண்ணவே இல்ல. இப்ப பண்ணட்டுமா?'
'போக்கிரி படவா. போதும் கிளாஸு நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பறேன் அப்படின்னு சொல்ல வரயாக்கும்?'
சிரித்து விட்டேன் அவர் இப்படி என் மனதில் இருந்ததை போட்டு உடைத்ததில்.
தொடரும்..
No comments:
Post a Comment