'எழுதி முடிச்சுட்டியா பாஸு? மேற்கொண்டு பாடத்துக்குள்ள போலாமா?'
'நான் எழுதினத பார்க்கலையா நீங்க?'
'சாவகாசமா அப்புறம் பாத்துண்டா போச்சு. நீ சீரியஸா எழுதும்போது உன் பின்னாடி வந்து பார்த்தேன் நோக்கு தெரியாம. கையெழுத்து கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கு. ரெண்டு வரி நோட்டு நிறைய எழுதுவ போல இருக்கு. உங்க அப்பா கையெழுத்தும் பிரமாதமா இருக்கும்.'
இப்படி சொன்னவர் சற்று அமைதியாகி விட்டார். என்னுடைய அப்பா சிந்தனைகள் அவருக்கு வருத்தத்தை கொடுத்திருக்க வேண்டும்.
'மாமா, மேற்கொண்டு சொல்லித்தரேன்னு சொன்னேளே?'
என்னுடைய திசைதிருப்பல் அவருக்கு எதார்த்தத்தை புரிய வைத்திருக்க வேண்டும்.
'ஓம் பூஹு ஓம் புவஹ ... ஓம் சத்யம் வரைக்கும் பார்த்தோமா. இப்ப மேற்கொண்டு சொல்லு பார்ப்போம்?'
சொல்லத் துவங்குகிறேன்.
'ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனா ப்ரசோதயாத்.. ஓமாபஹ.'
'இரு இரு இரு இரு சித்த இரு. பிரசோதயாத்.... அப்படிங்கறதோட நிறுத்திக்கோ.'
'ப்ரசோதயாத் வரைக்கும் கும்பகம். அதாவது மூச்ச இழுத்து பிடிக்கிற மந்திரம். இன்னொரு தடவை சொல்றேன். ஓம் பூ ஓம் புவ அப்படின்னு சொல்லிண்டே ஓம் சத்யம் சொல்ற வரைக்கும் மூச்ச இழுக்கணும். ஏற்கனவே விரல்களையெல்லாம் எப்படி வெச்சுக்கணும்னு சொல்லியிருக்கேன். அதையும் மறக்கக்கூடாது. இதுவரைக்கும் சொன்னது பூரகம். அதுக்கப்புறம் ஓம் தத்ஸவிதுர் அப்படின்னு தொடங்கி ப்ரசோதயாத் அப்படின்னு முடிக்கிற வரைக்கும் கும்பகம். அதாவது இழுத்துண்ட மூச்ச விடாம பிடிச்சு வெச்சிக்கிறதுக்காக சொல்லப்படற மந்திரம்.'
'இப்ப இந்த கும்பக மந்திரத்தோட அர்த்தத்தை பார்ப்போமா? உனக்கு சமஸ்கிருதம் அரிச்சுவடி பாடங்கள் தெரிஞ்சிருந்தா பதம் பிரிச்சுக் கூட சொல்லித் தருவேன். பரவால்ல. அதுக்காக கவலப்படாதே. மந்திரத்தோட பொருள மாத்திரம் மனசுக்குள்ள வாங்கிக்கோ. அதுவே போதும்.'
'ஓங்கார பொருளான எந்த பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகள தூண்டராரோ அனைத்தையும் படைக்கிற அந்த பகவானுடைய மிகச்சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம்.'
'இதுதாண்டா அந்த கும்பகம் மந்திரம் போர்ஷனோட முழு அர்த்தம். மூச்ச நாம நிறுத்தி வைக்கிற அந்த சில நொடிகள் பகவான ஜோதி ஸ்வரூபமா நினைச்சுண்டு த்யானம் செய்யணும். இதுல ஒரு சூட்சமம் இருக்கு. சாதாரணமா நாமே மூச்சை உள்வாங்கி பிடிச்சு நிறுத்தி வைக்கும்போது நம்மளையும் அறியாம ஒரு அமைதி கிடைச்சுடும். இதையே பிராக்டீஸ் பண்ணப் பண்ண அந்த அமைதியே உன்ன ஒரு வெற்றிடத்துக்கு அதாவது சூனியத்திற்கு கொண்டுபோயி தெய்வ சிந்தனைய கொடுத்துடறது. அந்த சமயத்துல நீ இந்த அமைதியில இருக்கும் போது பகவான ஜோதி சொரூபமாக த்யானிக்கறபோது நீ சொல்ற மந்திரங்களோட உதவியால ஒரு வைப்ரேஷன் உடம்புக்கு கிடைக்கிறது. பண்ண பண்ண நீயே இத உணர ஆரம்பிச்சுடுவ.'
'அடுத்தது என்ன பாக்கி இருக்கு? என்ன செய்யப்போகறோம் சொல்லு பாப்போம்?'
'நிறுத்தின மூச்ச விடப் போறோம். இல்லையா மாமா?'
'அதேதான் பாஸு. ஆனா அவசர அவசரமா விடக்கூடாது. மெல்ல மெல்ல இழுத்துப் பிடிச்சு வெச்சிருந்த மூச்ச மொள்ள மொள்ள விடணும். அப்படி விடும்போது அடுத்தகட்ட மந்திரத்தை மனசோட சொல்லிண்டே விடணும்.'
'குறிப்பா சொல்லப்போனா இந்த மூச்ச இழுக்கறது, புடிச்சு வெச்சுக்கிறது அப்புறம் மெள்ள மெள்ள விடறது இது எல்லாத்துக்குமே டைமிங் இருக்கு. ஆரம்பத்துல இந்த டைமிங் ஸென்ஸோட நீ பிராக்டிஸ் பண்ண பிராக்டிஸ் பண்ண அதுவே உனக்கு யதார்த்தமா பழகிடும். அந்த டைமிங் பத்தி அப்புறம் சொல்றேன். முதல்ல அந்த ரேசக மந்திரத்தை சொல்லிப் பார்ப்போம்.'
'ஓம் ஆபஹ
ஜ்யோதி ரஸஹ
அம்ருதம் ப்ரஹ்ம
பூர்ப்-புவஸ் ஸுவ-ரோம்'
'இதுக்கு என்ன அர்த்தம்? ஓங்காரமே ஜலம், ஒளி, ரஸம் பொருந்திய அன்னத்தை கொடுக்கக்கூடிய பூமி, உயிருக்கு ஆதாரமான வாயு மற்றும் பரந்த ஆகாஸம். அது மாத்திரமல்ல நமக்குள்ள இருக்கக்கூடிய வியாக்ருதிகள் அதாவது மனம் புத்தி அஹங்காரம் எல்லா தத்துவத்திற்கும் ஓங்காரமே.'
'நான் சொல்லி கொடுத்த பொருள அதே ஆர்டர்ல மந்திரத்தை நீயே கூட பதம் பிரிச்சு பார்த்து ஓரளவு புரிஞ்சிக்கலாம். ரொம்ப டெப்த்தா போய் மண்டய போட்டு கொழப்பிக்க வேண்டாம். மேலோட்டமா உனக்கு அத்தம் தெரிஞ்சா அதுவே போறும்.'
'சரி. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த பூரகம் கும்பகம் ரேசகம் இதுக்கெல்லாம் கால அளவு இருக்கு. அது ஆளாளுக்கு மூச்ச இழுக்குற பலத்தைப் பொருத்து இருக்கும். அதனால ஒரு ஜெனரல் ரூல அடிப்படையா வெச்சுக்கோ. அதாவது ஒரு பங்கு மூணு பங்கு இரண்டு பங்கு அளவுக்கு அந்த பூரகம் கும்பகம் ரேசகம் இருக்கட்டும். அதாவது பூரகம் செய்ய அதாவது மூச்சை இழுக்க அஞ்சு செகண்ட் ஆச்சுன்னா பதினஞ்சு செகண்ட் கும்பகத்துக்கும் பத்து செகண்ட் ரேஸகத்துக்குமா வெச்சிண்டு பிராக்டிஸ் பண்ணனும். கணக்குப் பாடத்துல விகிதாச்சாரத்தில சொல்றச்சே ஒண்ணு ஈஸ்டு மூணு ஈஸ்டு ரெண்டு அப்படின்னு சொல்லுவாளே (1:3:2). அப்படி புரிஞ்சுக்கோ. இந்த விகிதாச்சாரத்துல கூட பேதங்கள் உண்டு. உன்னோட மூச்சு திறனை பொருத்து பிற்பாடு ஒரு யோகா டீச்சர வெச்சு கூட இந்த விகிதாச்சாரத்தை திருத்தி அமச்சுக்கலாம். இந்த 1:3:2 எங்கரது ஒரு பொதுவான ரூல் அப்படின்னு புரிஞ்சுண்டு இது பிரகாரம் பண்ணிட்டு வா.'
'சரி பாஸு. இன்னிக்கி இத்தோட நிறுத்திக்கலாம். இந்த பிராணாயாமம் பத்தி பேச ஆரம்பிச்சா சொல்லிட்டே போகலாம். மூச்சுக் காத்துன்னு லேசா சொல்லிடறோம். ஆனா அதுக்குள்ள இருக்கிற விஷயங்கள் ரொம்ப ஆழமானது.'
'மாமா, பூரகம் கும்பகம் ரேசகம் இதுக்கெல்லாம் ரேஷியோ சொன்னேள். ஆனா கடைசியா சொன்ன கேவல கும்பகத்துக்கு ரேஷியோ சொல்லவே இல்லையே.'
'நீ கேட்கிறது சரிதான் பாஸு. அதோட ரேஷியோ ஒண்ணு. அதாவது பூரகத்துக்கு எடுத்துக்கிற டைம். பிராணாயாமம் நீ பண்ணும் போது கடைசியாக மூக்குல வெச்சிண்ட கைவிரல்கள bபாவமா காது கிட்ட எடுத்துண்டு போறோம் இல்லையா. அந்த டைம் இந்த கேவல கும்பத்துக்கான டைம்னு வெச்சுக்கலாம்.'
'இந்த மாதிரி காது கிட்ட கொண்டு போறது ஒரு ஐதிகமாகத்தான் சொல்லப்படறது. ரொம்ப வியாக்கியானங்கள் இதுக்கு கிடையாது. ஜஸ்ட் புரிஞ்சுண்டா போதும்.'
'ரொம்ப தேங்க்ஸ் மாமா. நீங்க இன்னிக்கி என்னோட ரொம்ப நேரம் செலவழிச்சுட்டேள். நான் கிளம்பட்டுமா மாமா?'
'சரி ஜாக்கிரதையா போயிட்டு வா. அடுத்த கிளாஸ்ல உனக்கு ஸங்கல்பத்தை பத்தியும் மார்ஜனம் பத்தியும் சொல்லி தரேன். எனக்கு ராதா கல்யாணம் விஷயமா கணக்கு வழக்குகள் எழுத வேண்டியிருக்கு. நீ கெளம்பு.'
நமஸ்காரம் அபிவாதயே முடித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment