Saturday, November 16, 2024

மனதோடுயாகம் - பகுதி 13

பகுதி 13

மடத்தின் வாசல் கதவு திறந்து இருந்தது. உள்ளே நுழைகிறேன். ஆனால் மடத்துக்குள் ஆசான் இல்லை. தோட்டத்து கதவு திறந்திருந்தது.

'அங்குதான் போயிருக்க வேண்டும்?'

'வாடா பாஸு. இப்பதான் வரியா?'

'ஆமாம் மாமா'

'கார்த்தால ஏதாவது சாப்பிட்டு வந்தியா?'

'அம்மாவுக்கு இன்னைக்கு ஒத்தை தெருவுல வேலை இருக்காம். அதனால கஞ்சிதான் வெச்சிருந்தா. மத்தியான சாப்பாட்டுக்கு நான் ஒத்த தெருவுக்கு வரணுமாம். நான் போகப் போகறதில்ல. போர் மாமா. அவ்வளவு தூரம் யார் போவா?'

'நீ வரலைன்னா அம்மா கவலைப்பட மாட்டாளா?'

'அம்மா வேலைக்கு போகறதும் நானும் அங்கு சாப்பாட போறதும் எனக்கு சுத்தமா புடிக்கவே இல்லை.'

'புரியிறதுடா ஒன்னோட கஷ்டம். கொஞ்ச நாள் தான. நீ நன்னா படிச்சு நல்ல உத்தியோகத்தில உக்காந்துட்டா எல்லாம் சரியாப் போகும்.'

'எனக்கு இன்னிக்கு மனசே சரியில்ல மாமா. என் பிரெண்டு வீட்டுக்கே சாப்பாட்டுக்கு போறது எனக்கு பிடிக்கவே இல்ல.'

'சரி வருத்தப்படாத. சந்தியாவந்தன க்ளாஸ் முடிஞ்சோண்ண நாம ரெண்டு பேரும் எங்காத்துக்கு போய் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம். சரியா?'

சரி என்று சொல்லவில்லை. ஆசை மட்டும் வந்து போனது.

பூக்களை பறித்துவிட்டு பூக்கூடைகளோடு மடத்திற்குள் வருகிறோம். பறித்த செம்பருத்திகளையும் செவ்வந்திகளையும் அங்குள்ள சுவாமி படங்களுக்கு வைக்கிறோம்.

பவளமல்லி, நந்தியாவட்டை, பன்னீர் மற்றும் சங்குப் பூக்களை அர்ச்சனைக்காக தனியாக வைக்கிறேன்.

'உங்களோட நித்திய பூஜை முடிஞ்சோண்ணதானே நம்ம கிளாஸ்?'

'இன்னைக்கு ப்ராஸனம் மட்டும் தான சொல்லித்தரப்போறேன். அத முடிச்சுட்டே பூஜய ஆரம்பிக்கிறேன். நீ இன்னிக்கு கோபமா வேற இருக்கியே?'

'அதெல்லாம் இல்ல மாமா.'

சொல்லும்போதே என் வருத்தம் என் கோபத்தையும் சேர்த்தே அவருக்கு காண்பித்திருக்க வேண்டும்.

'சரி பாஸு. ஆசனங்கள ரெடி பண்ணு. ஆரம்பிச்சுடலாம்.'

அவர் அமரும் பலகை சத்தத்தோடு தரையில் உட்காருகிறது. அந்த சத்தம் உணர்த்திய என் கோபம் அவருக்கு லேசான சிரிப்பை கொடுத்தது.

ஃபாஸ்டாக அவருக்கு நமஸ்காரம். ஜெட் ஸ்பீடில் அபிவாதயே. பிறகு சட்டென்று என் இருக்கையான கோரைப் பாயில் உட்காருகிறேன்.

'எதுக்கு இவ்வளவு அம்மா மேல இன்னமும் கோபம் ஒரு சின்ன விஷயத்துக்குப் போய்? கோபத்தோடு இருந்தா எப்படி பாடங்கள் புரியும்? வேணும்னா நாளைக்கு கிளாஸ் வெச்சிக்கட்டுமா?'

'வேண்டாம் மாமா. நீங்க ஆரம்பிங்கோ. நான் கவனமா கேட்கறேன்.'

'சரி. ப்ராஸனம் அப்படின்னா என்ன தெரியுமா?'

பதில் என்னிடம் இல்லை என்பது அவருக்குப் புரிந்து அவரே தொடர்கிறார்.

'ப்ராஸனம் அப்படின்னா தமிழ்ல உட்கொள்ளுதல்னு அர்த்தம். ப்ராஸனம் செய்யும் போது என்ன சாப்பிடப்போறோம்?'

'தீர்த்தத்தை தான சாப்பிட போறோம் மாமா? சந்தியாவந்தனம் பண்ணும்போது மந்திரத்தை சொல்லி தீர்த்தத்தை சாப்பிடறதுக்கு பேர்தான் பிராஸனமா மாமா?'

'அதே தான். ப்ராஸனத்துக்கான மந்திரத்த சொல்லிட்டு ஜலத்த உட்கொள்ளுவது அப்படிங்கறது ப்ராஸனம் தலைப்பில வர்ரது.  

'இந்தப் பிராஸனம் அப்படிங்கற வார்த்தை வேற எதுல வருதுன்னு கொஞ்சம் ஞாபகப்படுத்தி சொல்லு பாப்போம்?'

யோசிக்கிறேன். என் யோசனை அவரைச் சற்று மௌனமாக வைத்திருக்கிறது.

'எஸ் மாமா. இப்போ ஞாபகம் வந்துடுத்து மாமா. அன்னப்பிராஸனம்?'

'கெட்டிகாரண்டா நீ. சட்டுன்னு புடிச்சுட்டியே? அன்னத்தை உட்கொள்வதால் அன்னப்பிராஸனம். குழந்தைக்கு முதல் முதல்ல அன்னத்தை ஊட்டுகிற வைபவத்திற்கு பேரு அன்னப்பிராசனம். முதல் முதல்ல அந்த குழந்தை அன்னத்தை உட்கொள்ளும் போது அதுக்கு எதுவும் கெடுதி வந்துடக் கூடாதுன்னு பகவான பிரார்த்திச்சிண்டு மந்திரங்கள சொல்லிண்டே ஊட்டறாளோன்னோ?'

'அதே மாதிரி வாத்தியார்கள் எல்லாம் ஜபம் சொல்லிட்டு கலச தீர்த்தத்தை பூஜையில கலந்துண்டவாளுக்கு உத்தரணியால கொடுக்கும்போது சில மந்திரங்களை சொல்லிண்டே கொடுக்கறத கூட நீ பார்த்திருப்பியே? 'அகால ம்ருத்யு ஹரணம் (1), ஸர்வ வ்யாதீ நிவாரணம் (2), சமஸ்த பாப சமனம்(3) - மந்த்ர பூதோதக ப்ராஸனம் சுபம்'

'பிராஸனம் அப்படிங்கிற வார்த்தை இங்க கூட வர்ரது பார். இதிலேந்து ப்ராஸனம்னா உட்கொள்வது அப்படின்னு புரிஞ்சிக்க முடியறதோல்யோ?'

'இதுலேந்து இன்னொண்ணையும் தெரிஞ்சுக்கிறோம். நாம எத ப்ராஸனம் பண்ணினாலும் பகவானை பிரார்த்திச்சுண்டு மந்திரங்களை உச்சரிச்சிண்டு சாப்பிடும்போது நம்மளோட பாபங்களை போக்கி ப்ராஸனம் பண்ற அந்த வஸ்து நம்ம உடலையும் மனசையும் சுத்தப்படுத்தறது அப்படின்னும் புரிஞ்சுக்கணும்.'

'இப்ப நாம சந்தியாவந்தனத்தில வர ப்ராஸன மந்திரத்துக்கு உள்ளேயும் மந்திரத்தினுடைய அர்த்தங்களுக்கு உள்ளேயும் போகலாமா? எங்கே உன் வாயால சொல்லு ஒரு தடவ ப்ராசன மந்திரத்த? நேர ஜம்முனு உக்காந்து கணீர்னு சொல்லணும் என்ன?'

'கார்த்தால சொல்ற மந்திரமா மத்தியான்னிகம் போது சொல்றதயா இல்ல சாயந்திரம் சொல்வதயா மாமா?'

'அப்படி போடு. எங்க பாஸுன்னா பாஸு தான். நீ இந்த கேள்வி கேட்டதால மூணு சந்தியாவந்தன வேளைகள்லயும் இந்தப் பிராசன மந்திரம் வித்தியாசப்படறது அப்படிங்கிறது நோக்கு நன்னா புரிஞ்சுருக்குன்னு அர்த்தமாகிறது. சபாஷ். சரி, கார்த்தால சந்தி பண்ணும்போது சொல்ற ப்ராசன மந்திரத்தையே சொல்லு பாப்போம். அதுக்கப்புறம் மத்த ரெண்டு வேளைகள்ல சொல்றத எடுத்துக்கலாம்.'

முதுகை நேராக்கி மார்பை விசாலமாக்கி மந்திரத்தை சொல்கிறேன்.

'ஸூர்யஸ்ச்ச
மாமன்யுஸ்ச்ச 
மந்யு பதயஸ்ச்ச மன்யுக்ருதேப்ய:

பாபேப்யோ ரக்ஷந்தாம், யத்ராத்ர்யா பாபமகார்ஷம்

மனஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யாம் உதரேண சிஸ்னா

ராத்ரிஸ் ஸ்தவலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோநௌ ஸூர்யேஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா'

'பிரமாதம் பாஸு. மந்திரத்துக்கான அர்த்தம் சொல்றதுக்கு முன்னாடி ஒரு விஷயம் உனக்கு சொல்றேன். கேட்டுக்கோ.'

'மனுஷாளோட கஷ்டங்களுக்கு காரணங்களா ரெண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு கோபம். இன்னொண்ணு நாம செய்யற பாவங்கள். என்னதான் ஜாக்கிரதையா இருக்கணும்னு நெனச்சாலும் கோபத்தை சில சமயம் தவிர்க்க முடியாம போயிடறது. அதே மாதிரி நம்மளையும் அறியாம பாவங்களை சேர்த்துண்டே போயிடறோம். மூட்டை மூட்டையா பாவங்கள சேர்த்துண்டே போனா ஒரு கட்டத்துல நமக்கு அந்த பாரம் ஜாஸ்தியாகி சுமக்க முடியாம கஷ்டங்களை கொடுத்துடறது. அதுலயும் நாம செய்யற சில பாவங்களை நாமளே பாவங்களா ஏத்துக்க வேற மாட்டேங்கறோம் இல்லையா?'

'இதுக்கு என்ன தீர்வு? பகவான் கிட்ட ஆத்மார்த்தமா வேண்டிண்டு அப்பைக்கப்ப நம்ம பாபங்கள போக்கிக்க முயற்சிக்கணும். நாம தெரிஞ்சே செய்யற பாவங்களை உன்னிப்பா கவனிச்சா அவைகள் நம்மளோட மனசாலையோ பேச்சாலயோ கைகளாலேயோ கால்களாலேயோ வயிறாலேயோ இல்ல நம்மளோட அந்தரங்க உறுப்பாலயோ தான் நடக்கறது. யோசிச்சு பார்த்தா உனக்கே இது நன்னா புரிபடும்.'

'நீ இப்ப சித்த முன்னாடி சொன்னியே பிராஸன மந்திரம் .... ஸுர்யஸ்ச மாமன்யஸ்ச... அப்படின்னு ஆரம்பிச்ச மந்திரம்.... நான் கூட சொன்னேனே இது பிராஸன மந்திரம்னு.... அந்தப் பிரார்த்தனை மந்திரத்தோட முழு அர்த்தமும் நான் சொன்ன விஷயங்கள் தான்.'

'என் கோபத்தால செஞ்ச பாவங்களையும், நான் மனசால வாக்கால கையால காலால வயிறால அந்தரங்க உறுப்பால செஞ்ச பாவங்கள் அனைத்தையும் சூரிய தேவரான நீங்கள் அவைகளை பஸ்பமாக்கி என்னை ரக்ஷிக்க வேண்டும்.'

'என்ன அழகான பாவமன்னிப்பு கேட்கிற மந்திரமா இருக்கு பாரு? மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்யும் போது இந்த மந்திரத்தையும் சேர்த்து சொல்வதால சூரிய பகவானோட கருணை நம்ம மேல விழுந்து நம்முடைய பாவங்கள் அவ்வப்போது களையப்படறதா புரிஞ்சிக்கணும்.'

'இந்த மந்திரத்தில் இன்னுமொரு விசேஷம் என்னன்னா இது ஒரு ஹோம மந்திரமாகவே வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான். ஒரு ஹோமத்துல தீயவைகளை நெருப்பிலிட்டு பஸ்பமாக்கி நல்லவைகள் தோன்றுவதற்காக பிரார்த்தனை பண்றது மாதிரியே மந்திரம் சொல்லி நான நம்ம உடம்புக்குள்ள தீர்த்தத்தை உள்வாங்கி குறித்து மனசைக் தூய்மையா வெச்சிக்கறோம்.'

'இதோட கொஞ்சம் நிறுத்திப்போம். நாம பறிச்ச பூவெல்லாம் வாடி போயிடறதுக்கு முன்னாடி அர்ச்சனை பண்ணிட்டு வந்துடட்டுமா? நீ வேணா தோட்டத்துக்கு போயி செடிகளோட விளையாடிண்டு இருக்கியா?'

தொடரும்...

No comments: