Showing posts with label உண்மையா. Show all posts
Showing posts with label உண்மையா. Show all posts

Friday, March 25, 2022

கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்து வரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம் தான் பொய்யானால், பாம்பை பாரு..

மருந்து தான் பொய்யானால் வாணம் பாரு..

சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..

சாமி தான் பொய்யானால் சாணம் பாரு..

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

இதற்கான விளக்கம்

மந்திரம் தான் பொய்யானால், பாம்பை பாரு

மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக  மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்

மருந்து தான் பொய்யானால் வாணம் பாரு

வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து
அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பது தான் இதன் பொருள்.

சாஸ்திரம் தான் பொய்யானால் கிரகணம் பாரு

ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன் கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.

எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமி தான் பொய்யானால் சாணம் பாரு

 இது ரொம்ப சுவாரசியமான விஷயம்.  கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். 

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள்.  அதில் தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி,  அதை சாப்பிடும்.

விநாயகர் என்று நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின்  கருத்து.

அர்த்தமுள்ள சனாதன தர்மம்..